இன்னும் எத்தனை பொய்களைத் தான் சொல்வது,
அத்தனையும் I’m fine என்றே முடிகிறது…
மனிதர்களே வேண்டாமென வெறுத்துச் செல்கிறேன்.
என் எதிரில் வருபவனும் அதையே நினைத்தவனாக இருக்கலாமல்லவா?
இந்த இரவுதான் எத்தனை பேரின் தூக்கத்தை கெடுக்கப்போகிறதோ…
இன்றிரவேனும் அழும் கண்ணீர் கொண்டு இப்பெரு நிலவை கரைத்து விட வேண்டும்…
ஆழ்ந்து அழ காரணம் நிறைய இருக்கிறது,
இவ்விரவும், கண்ணீரும் மட்டும் கொஞ்சமாய் இருக்கிறது…
ஆகப்பெரும் ஆசை எல்லாம் வலி தீர அழ வேண்டும் என்பதே…
நான் வாங்கிய குடை மழைக்குப் பழகியதாகத் தெரியவில்லை,
என்னோடு துணைக்கு அதுவும் நனைந்தபடி வருகிறது…
வெயில் நிலத்தில் பெய்யும் மழை போல, என்றேனும் அழுது விடுங்கள்.
மீண்டும் அந்த வறண்ட நிலத்திலிருந்து ஒரு பூ பிழைக்கட்டுமே சிறு துளி நீரிலிருந்து…
இதுவரை வந்த அத்தனைக்குப் பிறகும் இன்னும் எதோ ஒன்று மீதமிருக்கத்தான் செய்கிறது, இந்நெடு வாழ்வில்…
வீடு சேர்ந்த எல்லோரின் நிழல் இரவாக விழுகிறது இப்பூமியில்…
யாரின் கண்ணீரோ இன்னும் பெய்துகொண்டே இருக்கிறது இரவாக, மழையாக…
கடல் விட்டு திரும்பும் வரையில்,
கடல் சேர்ந்த நதி நான் இங்கு…
அறிமுகமில்லாத அத்தனை பிரச்சனைகளையும் சமாளித்துக்கொள்கிறேன்.
முகம் அறிந்த யாரேனும் எப்படி இருக்கிறாய் எனக் கேட்டுவிட்டுச் செல்லுங்கள்.
இப்போது நான் நலமாக இல்லை…
எப்படியேனும் இவ்விரவைக் கடந்தால் பிழைத்து விடுவேன், நிலவும் இருளும் இந்த இரவின் துடுப்பை எதிரெதிர் திசையில் செலுத்துகின்றது…
அன்பெனப்படுவது, யாரும் பார்க்காத விடியலில் பூக்கும் பூ…
Recent Comments