யாருக்காகப் பெய்கிறது மழை?

ஆளில்லா வீட்டின் வாசலில் பெய்யும் மழைக்கு யாரேனும் சொல்லுங்கள் அவ்வீட்டின் மக்கள் குடிபெயர்ந்து விட்டார்கள்…

அன்பென்பது ?

அன்பென்பது மழை,
அன்பென்பது நிழல்,
அன்பென்பது வெயில்,
அன்பென்பது கடல்,
அன்பென்பது அலை,
அன்பென்பது யாவும்,

அன்பென்பது சிறு குழந்தையின் கைப்பிடியில் கட்டுண்டு போகும் யானையாகவும் இருக்கிறது.

காலம் கருணையற்றது – 1

காற்றிலிருந்து பலூனைக் காக்கும் குழந்தையின் கையில், ஊசியைக் கொடுத்து வேடிக்கை பார்க்கிறது காலம்.

ஒவ்வொரு பலூனாக உடைத்துச் செல்கிறது குழந்தை, காலப்போக்கில்.

காலம் கருணையற்றது – 2

பாதி எரிந்த பிணத்தின் மீது பெய்யும் அடை மழையை விடவா கருணையின்றிப் போய்விடுவோம் நாம்?

பாதிப் பிணம் எரிந்து, மீதிப் பிணம் மிச்சமிருக்க அதை வேடிக்கை பார்த்தபடி நகர்கிறது கொடுங்காலம்.

இறந்தும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை இவ்வுலகம்.

கருணை மழை

கருணையின்றி மழை பெய்யும் வானத்தின் கீழ் நின்று,

கருணையோடு இருக்கும் மடி தேடித் திரிகிறது ஒற்றைக்குடை.

காத்திருப்பு

என்றேனும் வரும்
அந்த மழைக்குத் தானே
எப்போதும் காத்திருக்கிறது
அந்த ஒற்றை மரம்…

தேவதைகள்

கடவுள்களுக்கு தேவைப்படுவது போல
நல்ல நேரம்,
நல்ல நாள்,
நல்ல காலமெல்லாம்
தேவதைகளுக்கு எப்போதும்
தேவைப்படுவதில்லை.

தேவதைகள் வந்து செல்லும் அச்சிறு கணத்திலும் நம் வாழ்வில் எதிர்பார்த்திராத, காத்திருக்காத அந்த அற்புதத்தை நிகழ்த்திவிடுகிறார்கள்.

அன்பைத் தவிர தேவதைகளுக்கு ஆண்பால், பெண்பால் என அடையாளம் இருப்பதில்லை. அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கிறார்கள்.

கட்டுப்பாடுள்ள கடவுள்களின் மீது நம்பிக்கை இல்லையே தவிர, யாராக வேண்டுமானாலும் இருக்கும் எளிமையான தேவதைகளின் மீது பெரும் நம்பிக்கை உண்டெனக்கு.

நிழல் மட்டும் நிச்சயம்

நிழல்கள் எப்போதும்
பிறப்பதும் இல்லை,
இறப்பதும் இல்லை.

இருளும் வரை இருக்கிறது அவ்வளவே!

உலகின்
முதல் மனிதனுக்கு முன்பும்,
கடைசி மனிதனுக்குப் பின்பும்
நிழல் மட்டும்
நிரந்தரமாக இருக்கிறது இப்பூமியில்…

காத்திருப்போம் நாளைக்காகவும்,
நாளை வரப்போகும் நிழலுக்காகவும்…

யாரின் நிழல்கள் நாம்?

நாம் புரிந்துகொள்ளாத
ஒவ்வொருவரின் அன்பெல்லாம்
நம்மைச் சுற்றிய நிழலாகிறது.

அந்த நிழலும் சரி,
அவர்களின் அன்பும் சரி
நம்மிடம்
தொடர்பு கொள்வதில்லை,
தொந்தரவு செய்வதில்லை,
எதிர்பார்ப்பதும் ஏதுமில்லை,
எதிரில் இருப்பதும் இல்லை,
அது அதுவாகவே இருந்து
நம்மை நாமாகவே இருக்கச் செய்கிறது.

நிஜங்களை விட
நிழல்கள் எப்போதும்
நமக்குத் துணை நிற்கிறது.

நிஜங்கள் இல்லாத வாழ்கையை விட,
நிழல்கள் இல்லாத வாழ்க்கை நினைத்துப் பார்க்கவே பயமாயிருக்கிறது.

இவ்வாழ்வில் யாரின் நிழல்கள் நாம்?

இரகு

08.58 PM

கடல் என் மோட்சம், கரை என் வாழ்வு

கடல் என்னை மூச்சுமுட்டாத படி மூழ்கடிக்கும்,

கடல் என்னைக் கண்டுபிடிக்கும் தூரத்தில் தொலைத்து வைக்கும்,

கடல் என்னை நொறுக்காமல் மோதி உடைய வைக்கும்,

கடல் என்னைக் காரணம் இல்லாமல் அழ வைக்கும்,

சக மனிதன் செய்யும் அத்தனையையும் மாற்றிச் செய்யும் கடல், கடைசி வரை நான் தூக்கிப் பார்க்கும் கைக்குழந்தை.

அதன்முன் பிறந்து, தவழ்ந்து, நடந்து, ஓடி, ஆடி, களைத்து, கரைந்து போகிறேன் நான்.

கடல் என் மோட்சம், கரை என் வாழ்வு. இடையில் நான், நீச்சல் தெரியாத மீன்.

Start a Blog at WordPress.com.

Up ↑