தேவதைகள்

கடவுள்களுக்கு தேவைப்படுவது போல
நல்ல நேரம்,
நல்ல நாள்,
நல்ல காலமெல்லாம்
தேவதைகளுக்கு எப்போதும்
தேவைப்படுவதில்லை.

தேவதைகள் வந்து செல்லும் அச்சிறு கணத்திலும் நம் வாழ்வில் எதிர்பார்த்திராத, காத்திருக்காத அந்த அற்புதத்தை நிகழ்த்திவிடுகிறார்கள்.

அன்பைத் தவிர தேவதைகளுக்கு ஆண்பால், பெண்பால் என அடையாளம் இருப்பதில்லை. அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கிறார்கள்.

கட்டுப்பாடுள்ள கடவுள்களின் மீது நம்பிக்கை இல்லையே தவிர, யாராக வேண்டுமானாலும் இருக்கும் எளிமையான தேவதைகளின் மீது பெரும் நம்பிக்கை உண்டெனக்கு.

யாரின் நிழல்கள் நாம்?

நாம் புரிந்துகொள்ளாத
ஒவ்வொருவரின் அன்பெல்லாம்
நம்மைச் சுற்றிய நிழலாகிறது.

அந்த நிழலும் சரி,
அவர்களின் அன்பும் சரி
நம்மிடம்
தொடர்பு கொள்வதில்லை,
தொந்தரவு செய்வதில்லை,
எதிர்பார்ப்பதும் ஏதுமில்லை,
எதிரில் இருப்பதும் இல்லை,
அது அதுவாகவே இருந்து
நம்மை நாமாகவே இருக்கச் செய்கிறது.

நிஜங்களை விட
நிழல்கள் எப்போதும்
நமக்குத் துணை நிற்கிறது.

நிஜங்கள் இல்லாத வாழ்கையை விட,
நிழல்கள் இல்லாத வாழ்க்கை நினைத்துப் பார்க்கவே பயமாயிருக்கிறது.

இவ்வாழ்வில் யாரின் நிழல்கள் நாம்?

இரகு

08.58 PM

வானம் முழுவதும் மழை

என் வீட்டுக் குப்பை மேட்டில் வளர்ந்த,
யார் கால் பட்டாலும் கசங்கிவிடும்
சின்னஞ்சிறு செடி தான் அது.

அளவில் அது ஒன்றும் ஆள் உயரமும் இல்லை,
அவ்வளவு பெரிய ஆலமரமும் இல்லை.

ஆனாலும் என்ன….

முழு வானம் கரைந்து மழையாகிப் போனாலும், தன் முதுகில் தாங்கி இறக்கிவிடத் தயாராகத் தான் நிற்கிறது அந்தச் செடி.

மழை தான் வருவதாயில்லை.
இருக்காதா பின்ன, உயரத்திலிருந்த விழ யாருக்குத்தான் விருப்பம்?

– ரகு
21-06-2020

#தமிழ் #கவிதை #மழை #tamil #poems

Start a Blog at WordPress.com.

Up ↑